திங்கள், 22 ஜூன், 2009

சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிகள்



சுவாமி விவேகானந்தரைப் பற்றி அறியாமல் யாரும் இருக்கமுடியாது. அவர் ஒரு வீரத்துறவியாவார். அவரது பொன்மொழிகள் அர்த்தம் மிகுந்தவை. அவற்றில் பொதுவாக அவர் கூறிய சில பொன்மொழிகளைப் பார்க்கலாம்.பொதுவான பொன்மொழிகள்:-* இருதயம் விரிவடைந்துள்ள இடத்தில்தான் உண்மை ஞானம் உதிக்கும். அந்த உண்மை ஞானம்தான் நம்பிக்கை.* அடக்கப்படாமல் உள்ள மனமும், அறவழியில் செலுத்தப்படாத மனமும் நம்மை எப்போதும் கீழ் நோக்கியே இழுத்துச் சென்று அழித்துவிடும். அடக்கப்பட்ட மனமும், அறவழியில் செல்லும் மனமும் நமக்குப் பாதுகாப்பை அளித்திடும். உலகபந்தங்களில் இருந்து விடுதலையளிக்கும்.* கபடம் இல்லாத நாத்திகன் வஞ்சகனை விடச் சிறந்தவன் ஆவான்.* காமம், பொன்னாசை இவைகளால் ஆளப்படும் அற்பர்கள் பொருட்படுத்தப்படக்கூடியவர்கள் அல்லர்.* எவர் ஒருவருடைய நெஞ்சு ஏழை மக்களுக்காகத் துயரத்தில் அழுமோ, அவரையே நான் மகாத்மா என்பேன்.* அன்பு நெறியிற் சென்று உலகம் உய்வடைந்திட வழிகளைக் கூறும் முறை மதம் எனப்படும்.* கோழைகளே பாவ காரியங்களைப் புரிந்திடுவர். தைரியமுடையோர் ஒருக்காலும் பாவம் செய்யார்.* பலமற்ற மூளையில் நாம் எதையுமே செய்ய இயலாது. அதனால் நாம் அதைப் பலப்படுத்த வேண்டும்.* அச்சமே நமக்குத் துயரத்தைத் தருவது. அச்சமே கேட்டை விளைவிப்பது. அச்சமே மரணத்தைத் தருவது. நமது உண்மை இயல்பை நாம் அறிந்து கொள்ளாமல் இருப்பதனால்தான் நமக்கு அச்சம் ஏற்படுகின்றது.* இவ்வுலகில் பிறந்த நீங்கள் அதற்கு அடையாளமாக ஏதேனும் விட்டுச் செல்லுங்கள். இல்லையேல் உங்களுக்கும் மரங்கள் கற்களுக்கும் வேறுபாடு இல்லாமற் போய்விடும்.* முதலில் வேலைக்காரனாயிருக்கக் கற்றுக் கொண்டால், எஜமானாகும் தகுதி பின்னர் தானாகவே வரும்.* அன்புடையவனே வாழ்பவன். சுயநலமுடையவனோ செத்துக் கொண்டிருக்கின்றான் என்றே பொருள்.* சேர்ந்து வாழ்தலே சிறந்த வலிமையாகும்.* எந்த வேலையாக இருந்தாலும் அதைத் தன் விருப்பத்திற்கு ஏற்றதாக மாற்றுபவனே அறிவாளியாவான்.* தன்னை அடக்கப் பழகிக்கொண்டவன் வேறு எதற்கும் சிக்கமாட்டான். அத்தகைய தகுதி உள்ளவனே உலகில் நன்றாக வாழத் தகுதியுள்ளவன்.* பலமே வாழ்வு, பலவீனமே மரணம்.* தூய்மை, பொறுமை, விடாமுயற்சி இவை மூன்றும் வெற்றிக்கு இன்றியமையாதவையாகும். அத்துடன் இவை அனைத்துக்கும் மேலாக அன்பு இருந்தாக வேண்டும்.* உறுதியுடன் இரு, அதற்கு மேலாகத் தூய்மையானவனாகவும், முழு அளவில் சிரத்தை உள்ளவனாகவும் இரு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக